1 ரூபாய் முதலீடு செய்தால்...3,700 ரூபாய் வருமானம்!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் டிவிஎஸ் வேளாண் நிறுவனம் உள்ளது. அண்மையில் இங்கு பாரம்பரிய விதைக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கென்யா சாமை, பிச்சிகாடி கேழ்வரகு, ஜிம்பாவே கேழ்வரகு மற்றும் அல்சரை குணப்படுத்தக் கூடிய சித்தூர் பூஜா அவரை போன்ற அரிய வகை விதைகளும் இடம் பெற்றிருந்தன. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றான நவீன இயற்கை பூச்சிவிரட்டி கருவிகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது விவசாயிகளை கவர்ந்தன.

கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பேராசிரியர் புத்தர், ''குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலாவதாக இருப்பது நம் வேளாண் துறைதான். ஒரு ரூபாய் முதலீடு செய்தால் 3,750 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். 1 ரூபாய் 20 பைசா (இன்றைய விலை 1.40 பைசா) கொடுத்து 1 கிராம் முருங்கை விதை வாங்குகிறோம். ஒரு கிராமுக்கு 5 முதல் 7 விதைகள் இருக்கும். இதை வீட்டுத் தோட்டத்திலும், வரப்புகளை சுற்றிலும் கூட நடவு செய்யலாம். எட்டிலிருந்து ஒன்பது மாதத்தில் காய் பிடித்துவிடும்.

ஐந்து மரங்கள் என்றே கணக்கில் கொண்டாலும், ஒரு மரத்திலிருந்து 150 முதல் 200 காய்கள் கிடைக்கும். இன்றைய விலையில் ஒரு காய் 5 ரூபாய்க்கு விற்றால்கூட, 5 மரங்களிலிருந்து, 1 ஆண்டுக்கு (750x5) சுமார் 3,750 ரூபாய் வருமானம் ஈட்டலாம்" என்று பேசியவர்.



"பெரும்பாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிலங்களில் துத்தநாக குறைபாடு உள்ளது. இந்த குறைபாடுகளை தாங்கும் தன்மை பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. குறிப்பாக இந்த பகுதிகளில் மட்டைகார், குட்டையான், வரப்புக்குடைஞ்சான், சீரகச் சம்பா, அவசரச் சம்பா, வடக்கத்திச் சம்பா, செம்பிலியான் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்யலாம்’’ என்று ஆலோசனையும் வழங்கினார்.

காரிமங்கலம் தோட்டக்கலை இயக்குனர் ராஜேந்திரன் பேசும்போது ''இயற்கை விவசாயம் செய்வோரை ஊக்கவிக்கும் வகையில் ஷெட் அமைத்து மண்புழு உரம் தயார் செய்யும் விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் மானியமும், வெர்மிபெட் அமைத்து உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 1,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது" என்ற தகவலையும் சொன்னார்.

-மு.மணி

Post a Comment

0 Comments