வலிகளை வென்ற மேரி கோம்!

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்திய வீராங்கனை மேரி கோம், தென்கொரியாவின் ஹைகோவ் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேரி கோம் தனது அபார திறனால், 48 கிலோ எடைப் பிரிவிலான இறுதி ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் மியாங் சிம்மை வீழ்த்தினார்.

விறுவிறுவிப்பான இந்த ஆட்டத்தில் கிம் மியாங் தந்த சவாலை சாதுர்யமாக எதிர்கொண்டு போராடி வெற்றி பெற்ற மேரி கோம் வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர் கொண்டு தான் வென்றுள்ளார். இதுபோன்ற சாதனைகளை சொந்தமாக்கிய மேரி கோமின் கடந்து வந்த பாதை...

திருமணமான பெண்களை வேலைக்குப் போக அனுமதிப்பதே இன்றும் பெரும்பாடாக பல வீடுகளில் இருக்க, வீராங்கனையாக, அதுவும் குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்குகிற அளவுக்கு உயர வேண்டும் எனில், எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். அப்படி பல தடைகளைத் தாண்டி வந்தவர்தான் மேரி கோம்.



மணிப்பூரின் கங்காதேய் பகுதியில் மார்ச் 1, 1983ல் பிறந்தார் மேரி கோம். பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத கோம், மீண்டும் தேர்வுக்குத் தயாராவதை விரும்பவில்லை. தனது சிறுவயது இன்ஸ்பிரேஷனான டிங்கோ சிங்கின் பாக்ஸிங் திறமை அவரை குத்துச்சண்டைக்கு இழுத்தது. 2000ல் குத்துச்சண்டை விளையாட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால், கைக்குப்போடும் கிளவுஸ்கூட அவரால் வாங்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல். அவரிடமிருந்த ஆர்வம் கிளவுஸ் போடாத வெறும் கையாலேயே குத்துச்சண்டையை பழக வைத்தது.

இதெல்லாம் மேரி கோமின் குடும்பத்துக்கு தெரியாமலே நடந்தது. ஒருநாள் செய்தித்தாளில் சிரித்தபடி மேரி கோமின் புகைப்படம் வெளியாக, அதிர்ந்தார் அவரது தந்தை. ‘‘நீ குத்துச்சண்டை போடறியா... அப்புறம் எவன் உன்னை கல்யாணம் செஞ்சுக்குவான்?’’ என்று கத்த ஆரம்பித்தார். ஆனால், தாய் ஆதரவு அவருக்கு இருந்தது.

வறுமை ஒருபக்கம், சவால்கள் இன்னொரு பக்கம் என பயிற்சியைத் தொடங்கிய கோம் சர்வதேச அங்கீகாரத்துக்காகப் போராடினார். இறுதியில் ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட மேரி கோம், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியர் ஒருவர் குத்துச் சண்டையில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் பெற்றார்.

பதக்கம் வென்ற மேரி கோம், வடகிழக்குப் பகுதி பல ஆண்டு காலமாக கவனிக்கப்படாமல் இருப்பதை அமைதியாக எடுத்துச் சொன்னார். துணிந்துவிட்டால் எதுவுமே தடையில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னதால்தான், அவரது வாழ்க்கை இன்று சினிமா படமாக எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறது. மேரி கோம் ஒரு ரியல் ஹீரோயின்... இந்தியாவிற்காக பாக்சிங்கில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே பெண் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தங்க மங்கைக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.

ச.ஸ்ரீராம்

Post a Comment

0 Comments