இது யாருடைய வகுப்பறை...?

இது யாருடைய வகுப்பறை...?-ஆயிஷா இரா.நடராசன்; பக்:247; ரூ.150; புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை -18; )044- 2433 2424.

நமது வகுப்பறை நமக்கானதுதானா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்நூல். நூலை முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது. அக் கேள்வி மிகவும் நியாயமானது என்பதை உணர முடிகிறது.
ஒருபுறம் வியாபாரம் ஆகிவிட்ட கல்வி மறுபுறத்தில் பாடப்புத்தகம், வகுப்பறை, மனப்பாடம், தேர்வு, மீண்டும் தேர்வு, மீண்டும் மீண்டும் தேர்வு, ரேங்க் என மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை விரட்டும் இன்றையக் கல்விச் சூழலில் நமது பள்ளிக் கல்வியை மாறுபட்ட கோணத்தில் ஆய்வு செய்கிறது இந்நூல்.
"ஆசிரியர்களே தேவையில்லை என்றார் ரூசா...!' என ஆரம்பித்து 7 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. பாரம்பரிய கற்பித்தல் முறையில் துவங்கி நவீன கல்வி வரை கல்வியின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளது, ஆசிரியப் பணி அனுபவத்தோடு, கல்வியை மிக நுட்பமாக ஆய்வு செய்திருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. கல்வியும், வகுப்பறையும் வேறு வேறு என்கிறார் நூலாசிரியர்.
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? கல்வி உளவியல் ரீதியாக மாணவர்களை எப்படி அணுகுவது? குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், வளர் இளம் பருவம் என மூன்று பருவங்களில் இருக்கும் பள்ளி மாணவர்களை எப்படி பிரித்து அணுகுவது? என்பனவற்றையும் நூல் தெளிவுபடுத்துகிறது.
ஆரம்பக் கல்விச் சட்டங்கள், கல்வியை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கின்றனவா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள நூலாசிரியர், வகுப்பறையில் இருக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் பல்வேறு கல்வியாளர்களின் சிந்தனைகள் மூலமாக ஆய்வு செய்திருக்கிறார். கல்வித் துறை சார்ந்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

Post a Comment

0 Comments