அரசுப்பள்ளியில் அரசுஊழியர்களின் பிள்ளைகள்! அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

அரசு ஊழியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2013 மற்றும் 2015ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு துணை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை கண்டித்து உமேஷ் குமார் சிங் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அரசு ஊழியர்கள், மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் அரசிடம் இருந்து ஊதியம் மற்றும் இதர சலுகைகள் பெறுபவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு நடத்தும் துவக்கப் பள்ளிகளுக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசின் தலைமை செயலாளர் எடுக்க வேண்டும். இதற்கு அவருக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் அரசு ஊழியர்கள் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணத் தொகையை செலுத்துகிறார்களோ அதே அளவு தொகையை அரசு கருவூலத்திலும் செலுத்த வேண்டும். கல்வித் துறை கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அரசு துவக்கப் பள்ளிகளில் லட்சக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்திருக்காது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments