ஜல்லிக்கட்டு நடைபெறுமா?

தமிழர் பண்பாட்டின் அடையாளமாக போற்றப்படும் ஜல்லிக்கட்டு நிகழாண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ஆண்டுக்கணக்கில் மேற்கொண்ட பயிற்சிக்கு பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஜல்லிக்கட்டுக் காளைகளும், அதை அடக்கத் துடிக்கும் காளையர்களும் காத்திருக்கின்றனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு அதிகம் நடைபெறும். கடந்த 2006-இல் மாடுகளை துன்புறுத்துவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. மீண்டும் 2007-இல் தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதன்பின்பு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கடந்த மே 7-இல், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் மே 19-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பிலும் மே 30-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு பகுதிகளிலும் நடப்பது வழக்கம். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காளைகள் தயாராகி வருகின்றன. நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையில் குத்த விட்டும் பயிற்சி அளிக்கின்றனர். வலுவை அதிகரிக்க, மூச்சுத் திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.
இதேபோல், காளையை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. கடுமையான கட்டுப்பாடுகளால் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டுப் போனது. சில ஊர்களில் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
வேறு சில ஊர்களில் கட்டுப்பாடுகள் மீறிய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ளன. காளைகள் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் பிராணிகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற காரணங்களால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து ஆண்டிபட்டியை சேர்ந்த முன்னாள் மாடுபிடி வீரரும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவருமான ராமசாமி (65) கூறியது:
ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடந்து வருகிறது. நான் மூன்றாவது தலைமுறையாக ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்து வருகிறேன். இந்தக் காளை எங்களது வீட்டுப் பிள்ளை. எங்கள் வீட்டு விஷேச நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் இந்தக் காளையின் படத்தைப் போட்ட பிறகு தான் எங்களது உறவினர்கள் பெயரை போடுவோம். இந்தக் காளை இல்லாமல் நாங்கள் வாழ முடியாது. எங்கள் வீட்டு பிள்ளைகளை நாங்கள் துன்புறுத்துவோம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எந்த தெளிவான முடிவும் தெரியாத நிலையில் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையிட்டு எப்படியாவது அனுமதி பெற்றுத் தந்துவிடும் என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Post a Comment

0 Comments