ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் ஓர் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை ஆற்றங்கரையில் நிற்க வைத்த அரிஸ்டாட்டில், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா எனப் பார்த்து வருகிறேன் என்றார்.
அவர் அதற்குத் தயார் கொண்டிருந்த சமயம், அவரின் மாணவர் யுவந்துஸ் தண்ணீரில் நீந்திச் செல்வதைக் கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய யுவந்துஸ், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றைக் கடக்கலாம் என்றார். அப்போது அரிஸ்டாட்டில் அவனிடம், உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அவன், இந்த யுவந்துஸ் போனால், ஆயிரம் யுவந்துஸ்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஓர் அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப் போவோம் என்றான். அன்பு வானொலி நண்பர்களே, ஆசிரியர் - மாணவர் உறவு இப்படி அமைந்து இருந்தால் எந்த ஒருச் சமூகமும் நல்லதொரு மக்கள்குலமாகப் புது மணம் பரப்பும். சுவாமி விவேகானந்தர் சொல்வார் – “ஒரு நல்ல ஞானம் நிறைந்த ஆசிரியரால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்று.
அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்குத் தருகின்றனர். ஆனால் ஓர் ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறார். இந்த ஆசிரியர்கள் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆசிரியர் தொழில் புனிதமானது. தெய்வீகமானது. ஒரு சமூகம், மிகஉயர்ந்த நிலையை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தத் துறையை விடவும் அதிகப் பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது ஆசிரியப் பணித்துறை. இன்று மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படும் ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும், நன்னெறிகளையும் வழங்க வேண்டியவர்கள் இந்த நல்லாசிரியர்கள். இவர்கள் மேலும் மேலும் உயரத் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கோபப்படாமல் பொறுமையோடு கல்வி கற்பிக்க வேண்டும் அன்பர்களே, சகலகலா வல்லவர்களான நல் ஆசிரியர்கள் மேன்மேலும் வாழ, வளர வாழ்த்துவோம்.
மனநல டாக்டர் சி.ராமசுப்ரமணியன்: மாணவர்களை அடிப்பது, அவமானப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதற்காக ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறைசொல்ல முடியாது. மாணவர்கள் பள்ளியில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அந்தநேரம் ஆக்கப்பூர்வமாக செலவிடப்படவில்லை, என்பது தான் குறை. பிள்ளைகள் இப்படித் தான் வளரவேண்டும், வாழவேண்டும் என்பதற்கான, புத்தக கையேடு எதுவும் இல்லை. நமது சுற்றுப்புறத்தைப் பார்த்துத் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. மனிதனை மனிதனாக, ஒழுக்கசீலனாக உருவாக்கும் புனிதமான தலம் தான், கல்விச்சாலைகள். வகுப்பில் உள்ள 40 மாணவர்களும், 40 விதத் திறமைகளுடன் இருக்கலாம். அதை கண்டறிந்து, வெளிப்படுத்துவதே, ஆசிரியரின் கடமை. எல்லோரையுமே நிறைய மதிப்பெண் பெற வைப்பதால், சமுதாயத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எதிர்கால சமுதாயம் தீயவழியில் செல்லாமல் இருப்பதே முக்கியம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர், மாணவர்கள் மனநிலை வேறு. இப்போதும் அதேபோல அடிப்பது, அவமானப்படுத்துவதைத் தொடரக்கூடாது. சமுதாய வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியில் நாம் முன்னேறினாலும், மாணவர்கள் எதையும் தாங்கும் சக்தி இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். அதனால் தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுக்கு செல்கின்றனர். அன்பு, முறையான வழிகாட்டுதலே மாணவர்களை திருத்தும் வழி. மாணவன் தவறு செய்தால், அவன் மனம் திருந்தும் வகையில் தண்டிக்கவேண்டும். மனம் வருந்தச் செய்யக்கூடாது. மற்றவர்கள் முன்னிலையில் அடிக்கும் போது, ஏளனமாக பேசும் போது, மனதில் ஏற்பட்ட ரணத்தை, அவன் சாகும்வரை மாற்றமுடியாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை தருவதோ, தற்காலிக பணிநீக்கம் செய்வதோ தீர்வாகாது. அவர்களை உளவியல் ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

மாணவர்களை எப்படி கையாள வேண்டுமென்ற, அடிப்படை அணுகுமுறையை கற்றுத்தர வேண்டும். தொட்டதற்கெல்லாம் அடிப்பதும், திட்டுவதும், ஏளனம் செய்வதுமாக இருந்தால், மாணவர்கள் மிகப்பெரிய மனநோயாளியாக மாறிவிடுவர். காலை 9 முதல் மாலை 4 மணி வரை, தொடர்ந்து பாடங்களை எழுதுவது, கேட்பதென, மாணவர்கள் சோர்ந்து விடுகின்றனர். ஆசிரியர்களும் களைத்து விடுகின்றனர். ஒவ்வொரு பாடவகுப்பு துவக்கத்திலும், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி மனதளவில் இளைப்பாற்ற வேண்டும். உட்கார்ந்து, எழச் சொல்வது, கையை தூக்கி, இறக்கி விடச் சொல்வது, புதிர், விடுகதை சொல்வதென ஐந்து நிமிடங்கள் மாணவர்களை சந்தோஷப்படுத்தினால், அடுத்த ஒருமணி நேரம் புத்துணர்வோடு பாடத்தை கவனிப்பர். வீட்டுப்பாடம் எழுதாதவர்கள், படிக்காதவர்களை கைதூக்கச் சொல்வதற்கு பதிலாக, எழுதியவர்கள், படித்தவர்களை கைதூக்கச் சொல்லலாம். மாணவப் பருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான், முக்கியமான கடமை.