தமிழக அரசு கோரிக்கை வைத்தால் போதும், உடனடியாக ஜெயலலிதாவை தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க கர்நாடக அரசு தயாராக உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யாரையும் சந்திக்கவில்லை:
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என தினசரி நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். ஆனால், யாரையும் ஜெயலலிதா சந்திக்க வில்லை. தொண்டர்கள் சிலர், சிறை வாயிலில் மணிக் கணக்கில் காத்து கிடப்பதும், ஒப்பாரி வைப்பதும், கோஷம் போடுவதுமாக உள்ளனர். இவர்களை ஒழுங்குபடுத்துவதும், சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதும் சிறை வாயிலில் உள்ள போலீசாருக்கு தினசரி ஒரு சவாலாக உள்ளது.

பதற்றம்:
ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இரு மாநில மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் வர்த்தக நிறுவனங்களும், அம்மாநில பஸ்களும் சேதப்படுத்தப்பட்டன. மேலும், கன்னடர்களை எதிர்த்து பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கர்நாடகாவில் வசிக்கும் தமிழகர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தினசரி தலைவலி:

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருப்பதால் தினசரி டென்ஷன் ஏற்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்துவிடும் என்றும், அவர் விடுவிக்கப்பட்டு, தமிழகத்திற்கு சென்றுவிட்டால் பெங்களூரு நகரின் சட்டம், ஒழுங்குக்கு பிரச்னை ஏற்படாது என்று கருதப்பட்டது. ஆனால், ஜாமின் கிடைக்கவில்லை. இதனால், ஜெயலலிதாவை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்ற கர்நாடகா ஜெயில் அதிகாரிகள் விரும்புவதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

எதிர்பார்ப்பு:
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றால் ஒன்று, ஜெயலலிதாவிடம் இருந்து அதற்கான கோரிக்கை எழ வேண்டும். அல்லது, தமிழக அரசு அதற்கான கோரிக்கையை கர்நாடக ஜெயில் அதிகாரிகளிடம் தர வேண்டும். இது குறித்து கர்நாடகாவின் சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அப்படி ஒரு கோரிக்கை வந்தால், அது உடனடியாக பரிசீலிக்கப்படும். மாற்றலுக்கான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும், கோர்ட் நடைமுறையின்படி எடுக்கப்பட்டு, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு அனுப்ப ஒத்துழைப்பு கொடுக்கப்படும்,' என்றார்.

வாய்ப்பில்லை:
ஜெயலலிதாவை தமிழக சிறைகளுக்கு மாற்ற கர்நாடகா அரசு விரும்பினாலும், அதற்கான வாய்ப்பு தற்போதைக்கு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், சிறை மாற்றம் குறித்த விஷயம் ஜாமினுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடலாம் என அ.தி.மு.க,., தரப்பு எண்ணுவதாகவும், அதனாலேயே, தற்போது சிறை மாற்றும் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

17ம் தேதி விசாரணை:இந்நிலையில், ஜெ.,வுக்கு ஜாமின் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற ஜெ., தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கோரிக்கையை, தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் சிக்ரி மற்றும் லோகூர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்து விட்டது.