மாணவர்களிடம் வேலை வாங்கியதை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள்!



சேலம்: சேலம் மாவட்டத்தில், கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பங்கேற்ற விழாவில், பள்ளி மாணவர்கள்
முட்டை உறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு காய், கறி சாதம் வழங்கப்பட்டு வந்தது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கீரையுடன் கலந்த பருப்பு சாம்பார், சாதம் மற்றும் முட்டை வழங்கப்பட்டு வந்தது. ஒரே மாதிரியாக வழங்கப்பட்டு வந்த உணவுக்கு பதிலாக, பல்வகை கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, முதல் மற்றும் மூன்றாவது வாரத்தில், திங்கட்கிழமை வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டைக்கடலை புலாவு, தக்காளி மசாலா முட்டை, புதன் கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம், சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம், கீரை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வேக வைத்த முட்டை வழங்கப்பட உள்ளது.
வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில், திங்கட்கிழமை சாம்பார் சாதம், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர், காய்கறிகள் சாதம் மற்றும் மிளகு முட்டை, புதன் கிழமை புளிசாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சம்பழ சாதம், மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை, வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட உள்ளது.

சேலம், கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், முதல் கட்டமாக நேற்று, சேலம் ஊராட்சி ஒன்றியத்தில், 118 மையங்கள் மூலம், 22,192 மாணவ, மாணவியர் திட்டத்தில் பயன் பெற்றனர்.
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், 84 மையங்களில், 8,553, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், 66 மையங்களில், 6,862, சேலம் மாநகராட்சியில், 62 மையங்களில், 8,275, இடைப்பாடி நகராட்சியில், 15 மையங்களில்,1,725, ஆத்தூர் நகராட்சியில், எட்டு மையங்களில், 599 பேர் என, மொத்தம், 353 மையங்களை சேர்ந்த, 48,206 பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வகை கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வழங்கப்பட உள்ளது.

கோட்டை பள்ளியில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சியில், சேலம் எம்.பி., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏக்கள்., செல்வராஜ், வெங்கடாசலம், கலெக்டர் மகரபூஷணம், மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து வி.ஐ.பி.,க்களும் பங்கேற்றனர்.

அப்போது, பள்ளி மாணவர்கள், முட்டை உறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பள்ளி மாணவர்களை பணியில் அமர்த்தியது, பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கண்முன் நடந்த இந்த நிகழ்வை, அவர்களும் கண்டு கொள்ளாததால், எதிர்காலத்தில், தினமும் இதுப்போன்று சமையல் பணிக்கு, மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர், இதுப்போன்ற நிகழ்வுகளை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

Post a Comment

0 Comments