புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க் களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் (சி.இ.ஓ.,), பணி நியமன உத்தரவை பெற்று பணியில் சேர்ந்தனர்.

இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்., 30 மற்றும் அக்., 1 அன்று, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு நாட்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, கருத்தாளர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பாக, பயிற்சி தரப்படும்' என்றார்.