போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

கேள்வி:-புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ரகளை செய்திருக்கிறார்களே?

பதில்:-உள்ளாட்சி இடைத்தேர்தல்களை தி.மு.க. புறக்கணித்திருப்பதைப் போல, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளன. மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தான் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளன. இந்த நிலையில் கூட, புதுக்கோட்டையில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பா.ஜ.க., கம்யூனிஸ்டு உட்பட யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல், அ.தி.மு.க.வினர் பயங்கர ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் வேட்பு மனுக்களையே கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

இதுதான் அ.தி.மு.க. அரசு நடத்துகின்ற உள்ளாட்சி மன்றத்தேர்தல்.

ஆசிரியர்கள் போராட்டம்

தற்போது ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதித்த தடையை எதிர்த்து அரசு அப்பீல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு “வெயிட்டேஜ்” மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்று நாங்கள் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, “தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 18 பேர் மனு தாக்கல் செய்திருந்த வழக்கில், மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, “பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக் கொள்ளலாம்; ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின்போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆசிரியர் நியமனம் குறித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அது ஒரு நல்ல உத்தரவாக அமைந்தது.

ஆனால் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், 4-9-2014 அன்று நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் முன் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்வதாகவும், அதனை உடனே விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு ஆசிரியர் நியமனத்தில் பிடிவாதமாக இந்த அரசு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் தமிழக அரசு இதிலே கவுரவ பிரச்சினை பார்த்துக் கொண்டு செயல்படாமல், மனிதாபிமான நோக்கத்துடன், பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதையும், அதிலே நான்கு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் மனதிலே கொண்டு, போராட்டம் நடத்துவோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி விரைவிலே ஒரு சுமூகமான முடிவு காண வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.